பூகம்பத்தால் ஒரு நாள் தள்ளிப் போன பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியீடு
சென்னை: சென்னையில் நேற்று அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நில அதிர்ச்சி காரணமாக சென்னை பல்கலைக்கழக தொலை தூரக் கல்வித்துறையின் தேர்வு முடிவுகள் வெளியிடுவது ஒரு நாளைக்குத் தள்ளிப் போய் விட்டது.
இந்தோனேசியாவில் நேற்று மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உலகமே ஆடிப் போய் விட்டது. சுனாமி அலைகள் வரப் போவதாக வெளியான எச்சரிக்கையால் உலகமே அல்லோகல்லப்பட்டு விட்டது.
சென்னை உள்பட தமிழகத்திலும் நேற்று பிற்பகல் நில அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் சென்னையில் 2 முறை நில அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் தலைநகரமே பயந்து போய் விட்டது. அத்தனை அலுவலகங்களும் மூடப்பட்டன. மக்கள் வீடுகளை நோக்கி படையெடுத்தனர். பலர் கடற்கரைக்கு ஓடினர் - சுனாமி வருவதை வேடிக்கைப் பார்ப்பதற்காக.
இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி சார்பில் நடத்தப்பட்ட முதுகலை பட்டப்படிப்புகளின் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனா நேற்று சென்னையில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியர்களுக்கு பிற்பகலில் விடுமுறை விடப்பட்டது.
இதனால் தேர்வு முடிவை நேற்றுஇரவு வெளியிட முடியாமல் போய் விட்டது. இன்று தேர்வு முடிவு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முடிவு வெளியாகிறதாம்.












Click it and Unblock the Notifications