'மாட்டுக் கறி விழா'வால் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பெரும் வன்முறை!
ஹைதராபாத்: ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த மாட்டுக் கறி திருவிழாவால் அங்கு பெரும் வன்முறை மூண்டது. பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் முதலில் பற்றி எரிவது உஸ்மானியா பல்கலைக்கழகம்தான். அந்த அளவுக்கு உணர்ச்சிகரமான மாணவர்கள் அவர்கள். குறிப்பாக தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தில் உஸ்மானியா மாணவர்களின் பங்கு மிகப் பெரியது. அவர்கள் இல்லாத தெலுங்கானா போராட்டத்தை பார்க்க முடியாது.
வழக்கமாக மற்ற பிரச்சினைகளுக்காக ஒற்றுமையாக போராடும் உஸ்மானியா மாணவர்கள் தற்போது தங்களுக்குள் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பல்வேறு தலித் மாணவர் அமைப்புகள் இணைந்து மாட்டுக் கறி திருவிழா என்ற பெயரில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஏராளமான பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருவிழாவின் நோக்கம் - யார் என்ன சாப்பிட நினைத்தாலும் சாப்பிடலாம். உணவுக்கு யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது. மாட்டுக் கறி சாப்பிடுவது அவரவர் விருப்பம் என்பதாகும். இந்த விழாவுக்கு வேறு ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தேவையில்லாத விழா, இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரான நிகழ்ச்சி இது என்று அவர்கள் ஆட்சபேனை எழுப்பினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில் நேற்று மாலை மாட்டுக் கறி திருவிழா தொடங்கியது. அப்போது இரு பிரிவு மாணவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. கல்வீச்சில் தொடங்கிய இந்த மோதல் பின்னர் அடிதடி, வாகனங்கள் எரிப்பு என பரவியது. இந்த மோதல் காரணமாக பல்கலைக்கழகமே போர்க்களமாக மாறியது. ஏராளமான மாணவர்கள் தாக்கப்பட்டனர். பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் மாணவர்களைக் கலைத்தனர். மோதலைத் தடுக்க வந்த போலீஸாரும் கல்வீசித் தாக்கப்பட்டனர்.
கடும் முயற்சிக்குப் பின்னர் போலீஸார் மாணவர்களை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அசோக்குமார் கூறுகையில், இதுவரை யாரும் புகார் தரவில்லை. எனவே யார் மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications