கள்ளக் காதலில் திளைத்த தங்கையை சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணன்!
கிருஷ்ணகிரி: கணவரை விட்டு விட்டு கள்ளக்காதலில் மூழ்கித் திளைத்த தனது தங்கையை அரிவாளால் வெட்டிக் கொன்றார் அண்ணன். அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த சின்ன கூத்தம்பட்டியைச் சேர்ந்தவர் தர்மன். இவருக்கு லட்சுமி என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர்.
19 வயதேயான லட்சுமியை, கோவிந்தராஜ் என்பபவருக்கு கட்டிக் கொடுத்தனர். பிளஸ்டூ படித்து வந்தவரான லட்சுமி, படிப்புக்காக தனது தாய் வீட்டில் தங்கிப் படித்து வந்தார். தேர்வை முடித்து விட்ட அவருக்கும், அதே பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு விட்டது. இது மணிகண்டனுக்குத் தெரிய வர அவர் தனது தங்கையைக் கண்டித்தார். கல்யாணம் செய்த பின்னர் இதுபோல நடப்பது அடாத செயல் என்று கண்டித்துள்ளார்.
ஆனால் லட்சுமி, தனது கள்ளக்காதலை கைவிடவில்லை. தொடர்ந்து சக மாணவருடன் கள்ளக் காதலில் திளைத்து வந்தார். தனது அண்ணன் கள்ளக்காதலைத் துண்டித்து விடுவார் என்ற அச்சத்தில் கள்ளக்காதலனுடன் திருப்பூருக்கு ஓடிப் போய் விட்டார்.
இதையடுத்து கணவர் கோவிந்தராஜும், அண்ணன் மணிகண்டனும் திருப்பூர் சென்று லட்சுமியை மீட்டனர். ஊருக்குக் கூட்டி வந்தனர். ஊருக்கு வந்த பிறகு லட்சுமி, தனது அண்ணனுடன் கடுமையாக சண்டை போட்டுள்ளார். தங்கையின் இந்த செயலால் கடும் ஆத்திரமடைந்த மணிகண்ன், கத்தியை எடுத்து லட்சுமியை சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டார். இதில் படுகாயமடைந்த லட்சுமி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
போலீஸார் விரைந்து வந்து லட்சுமி உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர். மணிகண்டனையும் கைது செய்தனர்.