நெல்லை அனல்மின் நிலையத்தை எதிர்த்து வழக்கு: மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு நோட்டீஸ்
மதுரை: இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது மின் தேவைக்காக துவங்கவிருக்கும் அனல்மின் நிலையத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி சங்கர்நகரைச் சேர்ந்த ஜேசு என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
மத்திய, மாநில அரசுகளின் கொள்கைப்படி மக்கள் வசிக்கும் பகுதியில் அனல்மின் நிலையங்கள் அமைக்கக் கூடாது. ஆனால் திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் அனல்மின் நிலையம் அமைக்க முயற்சி நடைபெற்று வருகின்றது.
இதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நிலத்தடி நீரை பாதிக்கும். உலர் சாம்பல், ஆக்சிஜனில் கலக்கும். மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா உட்பட பல்வேறு சுவாச பாதிப்புகள் ஏற்படும். மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இது பற்றிய பொது விசாரணை, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்தபோது இந்த பகுதி மக்கள் அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
ஆனால் தற்போது அனல்மின் நிலைய திட்டப் பணி துவங்கிய நிலையிலேயே பயங்கர சத்தம் மற்றும் தூசி எழுகிறது. எனவே, அனல்மின் நிலையம் இயங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, பி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரபுப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications