புதுக்கோட்டையில் போட்டியா?... 28ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் முடிவு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவது ஏப்ரல் 28ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இறுதி முடிவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து புதுக்கோட்டை தொகுதியில் முத்துக்குமரனை களம் இறக்கியது சிபிஐ. தேர்தலில் முத்துக்குமரன் சிறந்த வெற்றியைப் பெற்றார், அருமையான மக்கள் நலத் தொண்டர் என்ற பெயரையும் பெற்றார். சட்டசபையில் அதிக கேள்விகள் கேட்ட எம்.எல்.ஏவாகவும் விளங்கினார்.
இந்த நிலையில் ஏப்ரல் 1ம் தேதி சாலை விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார் முத்துக்குமரன். இதையடுத்து அங்கு 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
ஆனால் இந்தத் தேர்தலில் தாங்களேப் போட்டியிடப் போவதாகவும், எங்களை எதிர்ப்போருக்கு சங்கரன்கோவில் இடைத் தேர்தல் கதியே ஏற்படும் என்று அதிமுக பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இதனால் சிபிஐ அதிர்ச்சி அடைந்துள்ளது.
தொகுதியை தங்களுக்கே மீண்டும் தருமாறு வலியுறுத்தி அக்கட்சித் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. அதேசமயம், புதுக்கோட்டையில் நாங்கள் மீண்டும் போட்டியிடுவோம் என்று சிபிஐ முக்கிய நிர்வாகி துரை மாணிக்கம் கூறியுள்ளதால் பரபரப்பும் நிலவுகிறது. சிபிஐ வேட்பாளரை நிறுத்தினால் அக்கட்சிக்கு திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தரலாமோ என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 28ம் தேதி புதுக்கோட்டையில் முத்துக்குமரன் படத் திறப்பு மற்றும் குடும்பத்திற்கு நிதியளிப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர ரெட்டி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கட்சியினர் திரண்டு வருமாறும் சிபிஐ மாவட்ட பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தா.பாண்டியனுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே மறைமுகமாக நல்ல உறவே நீடித்து வருகிறது. மேலும் தேமுதிக, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுகவையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக முறைத்துக் கொண்டபோதும் கூட ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, மென்மையான போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளார், வருகிறார் தா.பாண்டியன். எனவே அவருக்காகவாவது ஜெயலலிதா, புதுக்கோட்டையை விட்டுத் தருவாரா என்று அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்












Click it and Unblock the Notifications