கொலை செய்யப்பட்ட ராமஜெயம் மீது நில அபகரிப்பு வழக்கு: பசுக்கள் காப்பகத்தை மிரட்டி பறித்ததாக புகார்!

ரெளடிக் கும்பல்கள், அரசியல் எதிரிகள், ரியல் எஸ்டேட் கும்பல்கள், பெண் விவகாரம் என பல காரணங்கள் கூறப்பட்டு வரும் இந்தக் கொலையில் போலீசார் மீதே கூட சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்தக் கொலை குறித்து போலீசாருக்கு முன்பே தெரியும் என்றும், இந்தக் கொலை நடந்தபோது ஒரு மூத்த அதிகாரி திருச்சியில் தங்கியிருந்து கண்காணித்தார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
ஏதோ ஒரு கும்பல் உதவியோடு போலீசார் நடத்திய மறைமுக எண்கெளண்டர் இது என்று கூட சொல்லப்படுகிறது. இதனால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந் நிலையில் ராமஜெயம் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் மேற்கு சித்திரை வீதியை சேர்ந்த நாராயணசாமி (52) ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் 2 ஏக்கரில் பசுக்கள் காப்பகம் நடத்தி வந்தார்.
மகன் சென்னையில் படித்து வருவதால் நாராயணசாமி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந் நிலையில் தனது பசுக்கள் மடத்தை அபகரித்ததாக ராமஜெயம் மீது கடந்த மாதம் மதுரை உயர் நீதிமன்றத்தில் நாராயணசாமி வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், அவரது உதவியாளர் கோபால்ராஜ் ஆகியோர் எனக்கு சொந்தமான பசுக்கள் காப்பகத்தை சென்னையை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன், வைத்தியநாதன், வைத்தி கல்யாணராமன் ஆகியோருக்கு எழுதி கொடுக்குமாறு மிரட்டினார்கள்.
பிறகு வலுக்கட்டாயமாக ரூ.50 லட்சத்துக்கு விலை பேசி தங்களது பெயருக்கு இடத்தை மாற்றி எழுதி கொண்டனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
நீதிபதி செல்வம் கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்து இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஸ்ரீரங்கம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ராமஜெயம் உள்பட 5 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் தற்போது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமஜெயம் இறந்துவிட்டதால், மற்ற 4 பேரிடமும் விசாரணை நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications