'லாட்டரி' மார்ட்டினை விடுவிக்க கோடிக்கணக்கில் பேரம் பேசுகிறார்கள்: மனைவி மீண்டும் புகார்

கடந்த வாரம் கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது கணவர் மார்ட்டினை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்காக அதிமுக பிரமுகர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் ரூ.50 கோடி பணம் கேட்கின்றனர்.
காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பெரிய தொகையாக லஞ்சம் கேட்டார். ஆனால் அவர் தமது பெயரை சொல்ல மறுத்துவிட்டார். எந்த டிபார்ட்மெண்ட்டு என்றும் கூறவில்லை. இப்படி பணம் கேட்டு பலரும் மிரட்டுகின்றனர். அப்படிப் பணம் கொடுக்காமல் போனால் வழக்கு மேல் வழக்குப் பதிவு செய்து சிறையிலேயே இருக்கச் செய்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.
இது தொடர்பாக நேரில் சந்தித்துப் பேச முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேரம் கேட்டிருக்கிறோம். "அம்மா" நேரம் ஒதுக்கிக் கொடுத்தால் என் கணவர் மார்ட்டினுக்கு எதிரான அனைத்து சதிகளையும் போட்டு உடைத்துவிடுவேன் என்றார்.
மேலும் தனது கணவர் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்த அவர், சென்னையில் ஏ.டி.ஜி.பி. ஜார்ஜிடமும் புகார் மனு கொடுத்தார்.
இந் நிலையில் டெல்லியில் மனித உரிமை குழுவிடமும் புகார் தந்துள்ள அவர் இன்று மீண்டும் நிருபர்களிடம் பேசுகையில்,
எனது கணவர் மீது 10 ரூபாய் மோசடி செய்ததாக பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள். அந்த வழக்கிற்கு விசாரணை என்ற பெயரில் அவரை அழைத்து சென்று துன்புறுத்தியுள்ளார்கள்.
என் கணவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சட்டரீதியாக எதிர்கொண்டு குண்டர் சட்டத்தில் இருந்து அவரை வெளியில் கொண்டு வந்தோம். அவர் வெளியே வரப்போகிறார் என்று நாங்கள் மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால் எங்களிடம் வேலை பார்த்து லட்சம் லட்சமாக சம்பாதித்த நபர்களை கொண்டே அவருக்கு எதிராக பொய் புகார்களை பெற்று வழக்கு பதிவு செய்தனர்.
குண்டர் சட்டத்தில் இருந்து வருவதற்குள் ஜெயலிலுக்குள்ளேயே மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு வருகின்றனர். இது மனித உரிமை மீறல். இவ்வளவு நாட்களாக எங்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி பல முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளனர்.
நாங்கள் தமிழக அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக இருக்கிறோம். முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் நடந்த உண்மைகள் அனைத்தையும் தெரிவிப்பேன். இதுவரை பலர் பலவிதமாக மிரட்டி ஏமாற்றி என்னிடம் பணம் பெற்றுச் சென்றுள்ளனர். இன்னும் சிலர் தொடர்ந்து போன் செய்து பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்.
ஒருவர் 500 கோடி ரூபாய் கேட்கிறார். எங்களிடம் அவ்வளவு சொத்து இல்லையே என்றால் மார்ட்டின் ஆயுள் முழுக்க உள்ளே இருக்க வேண்டியதுதான் என்று மிரட்டுகிறார். இன்னொருவர் ரூ. 200 கோடி கேட்கிறார். ஒருவர் ரூ. 100 கோடி போதும் என்கிறார்.
எனது மகன்கள் நன்கு படித்தவர்கள். என்னைப்போல படிப்பறிவில்லாதவர்கள் கிடையாது. அனைத்து சட்ட நுணுக்கங்களும் தெரிந்தவர்கள். எனவே எனது கணவரை காப்பாற்றுவதற்கு உறவினர்கள், பார்க்கவ குல சங்கம் மற்றும் வழக்கறிஞர்களுடன் சேர்ந்து போராடி வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications