காமராஜர் பார்முலாவைக் கையில் எடுக்கும் காங்.-பெருசுகளை விரட்டுகிறது!

1963ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் பெருந்தலைவர் காமராஜர். அப்போது அவர் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். காமராஜர் திட்டம் என்று அந்தத் திட்டம் பின்னர் பெரும் பிரபல்யமானது. அந்தத் திட்டம், ஒருவருக்கு ஒரு பதவி என்பதாகும். அதன் அடிப்படையில், லால் பகதூர் சாஸ்திரி, ஜெகஜீவன் ராம், மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல் போன்ற பெருந்தலைகள் கட்சிப் பணிக்கு அனுப்பப்பட்டனர். மொத்தம் 6 கேபினட் அமைச்சர்களும், 6 மாநில முதல்வர்களும் இந்த் திட்டத்தின்படி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. காமராஜரின் இந்தத் திட்டம் பல பெருந்தலைகளுக்கும் பொருந்தியதால் அனைவரும் இந்தத் திட்டத்தை வெகுவாக பாராட்டினர்.
தற்போது இதே திட்டத்தை மீண்டும் காங்கிரஸ் மேலிடம் கையில் எடுத்திருப்பதாக கருதப்படுகிறது. இதனால்தான் சல்மான் குர்ஷித், குலாம் நபி ஆசாத், வயலார் ரவி, ஜெய்ராம் ரமேஷ் போன்றோர் தாங்கள் கட்சிப் பணியாற்ற விரும்புவதாகவும், அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகவும் கட்சி மேலிடத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
குர்ஷித்தும், வயலார் ரவியும், தாங்கள் ராஜினாமாக் கடிதம் கொடுக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் குர்ஷித் கூறுகையில், அரசுப் பணியா, கட்சியா என்று வரும்போது கட்சிக்குத்தான் முதலிடம் என்று கூறியுள்ளது சூசகமாக அவர் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருப்பதை விளக்குவதாக உள்ளது. கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் விலகுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சல்மான் குர்ஷித், வயலார் ரவி, குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கட்சிப் பணிகளில் திறம்பட செயல்பட்டவர்கள்.எனவே அவர்களை கட்சிப் பணிக்கு அனுப்ப சோனியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆசாத் தற்போது பொதுச் செயலாளராக உள்ளார். வயலார் ரவி சமீபத்தில் தெலுங்கானா விவகாரத்தைப் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்டார்.
எனவே இந்த நால்வரையும் முழுக்க முழுக்க கட்சிப் பணியில் ஈடுபடுத்த சோனியா முடிவெடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது நடைமுறைப்படுத்தப்பட்டால் மீண்டும் காமராஜர் திட்டத்தை காங்கிரஸ் கையில் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications