டாக்டர், படிக்க யு.எஸ். போறீங்களா, படிச்சுட்டு உடனே திரும்பிடனும் சரியா?
டெல்லி: இந்த ஆண்டு முதல் மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் மருத்துவர்கள் படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்புவோம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவி்த்துள்ளார். படிக்கப் போகிறேன் என்ற பெயரில் மருத்துவர்கள் அமெரிக்காவில் செட்டிலாவதை தடுக்கத் தான் இப்படி ஒரு நடவடிக்கை.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மேல்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் எந்த மருத்துவரும், படிப்பு முடிந்தவுடன் நாட்டுக்கு திரும்பிவிடுவோம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு தான் செல்ல வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மேல்படிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்ற 3,000 மருத்துவர்கள் நாடு திரும்பவில்லை. அவ்வாறு படிப்பை முடித்து நாடு திரும்பாவதவர்களுக்கு இந்தியாவில் தொழில் செய்ய அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
இந்த ஆண்டு முதல் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களிடம் அரசிடம் இருந்து என்.ஓ.சி. சான்றிதழ் கேட்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வேறு எந்த நாடும் என்.ஓ.சி. சான்றிதழ் கேட்பதில்லை. ஒப்பந்தத்தை மீறினால் அவர்களை அமெரிக்காவில் தொழில் செய்ய அனுமதி மறுக்குமாறு அந்நாட்டு அரசுக்கு எங்களால் கடிதம் எழுத முடியும்.
எம்.பி.பி.எஸ். படிப்பு காலத்தை 5.5 ஆண்டுகளில் இருந்து 6.5 ஆண்டுகளாக அதிகரிப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. இது குறித்து மருத்துவக் கழகம் ஆய்வு செய்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications