தெஹல்கா அம்பலப்படுத்திய ராணுவ பேர வழக்கில் பங்காரு லஷ்மண் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம்
டெல்லி: 11 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தெஹல்கா அம்பலப்படுத்திய ராணுவ பேர வழக்கில் பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் பங்காரு லஷ்மண் குற்றவாளி என்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சித் தலைவராக 2001-ம் ஆண்டு பங்காரு லஷ்மண் பதவி வகித்தார். அப்போது தெஹல்கா ஊடகமானது இங்கிலாந்து ஆயுத கம்பெனி பிரதிநிதிகள் போல பங்காரு லஷ்மணைச் சந்தித்து ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான பேரத்தை நடத்தியது. அதை அப்படியே வீடியோவாகவும் படம் பிடித்தது. அதில் டெகல்கா குழு கொடுத்த ரூ1 லட்சம் லஞ்சப் பணத்தை பங்காரு லஷ்மண் வாங்கும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பங்காரு லஷ்மண் தமது பாஜக தலைவர் பதவியை இழக்க நேரிட்டது. மேலும் அவர் மீது ஊழல் தடுப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு 11 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை அண்மையில் நீதிபதி கன்வால் ஜித் அரோரா முன்பு நடைபெற்றது. அப்போது ஏப்ரல் 27-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
இன்று காலை முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பங்காரு லஷ்மண் குற்றவாளி என்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பங்காரு லஷ்மணுக்கான தண்டனை விவரத்தை நாளை அறிவிப்பதாக நீதிபதி கூறினார். இத்தீர்ப்பைத் தொடர்ந்து உடனடியாக பங்காரு லஷ்மண் கைது செய்யப்பட்டார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் பங்காரு லஷ்மணுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கக் கூடும் என்று தெரிகிறது.
பங்காரு லஷ்மணை குற்றவாளியாக டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி, டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத் தீர்ப்பு பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு சரியான பாடம் என்றார்.












Click it and Unblock the Notifications