வேட்டியை மடித்துக் கட்டி போஜ்பூரி சினிமாவில் 'விளையாடும்' தமிழ் டிஐஜி!

ஐந்து அடி 11 அங்குலம் உயரம் கொண்ட ரவீந்திரன் சங்கரன், பீகார் காவல்துறையில் டிஐஜியாக பணியாற்றி வருகிறார். கடந்த 16 வருடங்களாக பீகாரில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார். இப்போது இவர் போஜ்பூரி சினிமாப் படம் ஒன்றில் நடிக்க களம் இறங்கியுள்ளார்.
இவருக்கு போஜ்பூரி மொழி பேச வரும் என்றாலும் கூட உச்சரிப்பு அவ்வளவு சுத்தமாக இருக்காது. இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் கலக்கலாக நடிக்க ஆரம்பித்துள்ளார் சங்கரன்.
இந்தப் படத்திற்கு தீவாரா பே மன்வா டோலே என்று பெயரிட்டுள்ளனர். 43 வயதாகும் சங்கரன், பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒளிப்பதிவு படித்தவர் ஆவார். ஆனால் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பீகாருக்கு பணியாற்ற வந்து விட்டார்.
மொழி பெரிய பிரச்சினையாக இல்லையா என்று அவரிடம் கேட்டால், கமல்ஹாசன், ரேகா, ஸ்ரீதேவி என பலரும் இந்தியில் வந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். மேலும் நான் பீகாரிலேயே 16 வருடமாக இருக்கிறேன். இந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வமற்ற முதல் மொழி போஜ்பூரிதான். எனவே எனக்கு போஜ்பூரி பேச வரும். உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்காது என்றாலும் கூட என்னால் பேச முடியும்.
படத்தின் தயாரிப்பாளர் அலோக் குமார் கிரிட் எனக்கு நல்ல ஆதரவாக இருக்கிறார். நிறைய ஊக்குவிக்கிறார். போஜ்பூரியில்தான் என்னுடன் பேசுவார். நான் தப்பாக பேசுவது போல தெரிந்தால் இந்திக்கு மாறி விடுவார் என்றார் சங்கரன்.
இப்படத்தில் மீனவர் வேடத்தில் வருகிறாராம் சங்கரன். மே 10ம் தேதி படத்தை திரைக்குக் கொண்டு வருகின்றனர். லகான் படத்தில் ஆமிர்கான் காட்சியளித்ததைப் போல இவருக்கும் டர்பன், கை இல்லாத சட்டை, வேட்டி உள்ளிட்டவற்றை கட்டி விட்டுள்ளனர்.
படத்தில் உங்க பங்கு என்ன என்று கேட்டபோது, படத்தின் 2வது நாயகியின் சகோதரனாக நான் நடிக்கிறேன். 25 நிமிடங்கள் எனது காட்சிகள் வரும். இடைவேளைக்குப் பிறகுதான் நான் திரையில் தோன்றுவேன் என்றார்.
சங்கரனின் மனைவி மலர்விழியும் ஒரு ஐபிஎஸ் அதிகாரிதான். தனது கணவர் சினிமாவில் நடிப்பது குறித்து அவர் கூறுகையில், எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது, இவர் நடிப்பது. படத்தைப் பார்க்க அத்தனை பேரும் ஆவலாக உள்ளோம். முதல் நாள் முதல் ஷோ பார்க்கப் போகிறோம் என்றார் குதூகலித்தபடி.
சரி, இனிமே புல்டைம் சினிமாதானா என்று கேட்டால், கண்டிப்பாக கிடையாது. எனது சீருடையை நான் நேசிக்கிறேன். அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டு விட மாட்டேன். இது பொழுதுபோக்காக நடித்தது என்றார் கரெக்டாக.
ஆமாமா, சினிமாத் திரையை விட காக்கி உடுப்புதான் முக்கியமானது...!












Click it and Unblock the Notifications