1 வார பயணமாக இன்று டெல்லி வரும் இங்கிலாந்து இளவரசர்
டெல்லி: இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ 1 வார சுற்றுப்பயணமாக இன்று டெல்லி வருகிறார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாட்டு உறவை மேம்படுத்த தான் இந்த சுற்றுப்பயணம்.
இங்கிலாந்து இளவரசர் ட்யூக் ஆப் யார்க் ஆண்ட்ரூ இன்று டெல்லி வருகிறார். இங்கிலாந்து ராணி இரணடாம் எலிசபெத் ராணியாக முடிசூடிக் கொண்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னி்ட்டு அவரது சார்பில் 1 வார காலம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இளவரசர் மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் ஆகிய முக்கிய நகரங்களுக்கும், நாட்டின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்திற்கும் செல்கிறார்.
இது குறித்து இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து பேசும் அவர் டெல்லியில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்படும் அகரகாமி திட்டத்தையும் பார்வையிடுகிறார். மும்பையில் உள்ள மேற்கு கடற்படைத்தளம் மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி ஆகியவற்றுக்கு செல்லும் அவர் தொழில் அதிபர்களையும் சந்தித்து பேசுகிறார்.
கொல்கத்தாவில் குழந்தைகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். சென்னையில் 2ம் உலகப் போரில் பலியானவர்களின் நினைவிடத்திற்கு செல்லும் அவர் புனித மேரி தேவாலயத்தில் நடைபெறும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
பெங்களூரில் கர்நாடக ஆளுநரை சந்திக்கும் இளவரசர் இன்போசிஸ் மற்றும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கு செல்கிறார். நாகாலாந்து தலைநகர் கோஹிமா செல்லும் ஆண்ட்ரூ அங்குள்ள காமன்வெல்த் போர் நினைவிடத்திற்கு செல்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் உலகப்போரில் பாட்டில் ஆப் கோஹிமாவில் ஆயிரக்கணக்கான இங்கிலாந்து மற்றும் இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த நினைவிடத்திற்கு இங்கிலாந்து ராஜபரம்பரையைச் சேர்ந்த ஒருவர் வருவது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications