நெல்லையில் ரூ14 கோடியில் ஒருவழிப்பாதை மேம்பாலம் அமைக்க திட்டம் தயாரிப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தொடர்ந்து நீடித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பாளை.முருகன் குறிச்சி சிக்னலில் ரூ14 கோடியில் ஒருவழிப் பாதை மேம்பாமல் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி நகரில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாத தலைவலியாக இருந்து வருகிறது. புதிய 4 வழிச்சாலை திறக்கப்பட்ட பின்னரும் மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் தீர்ந்த பாடில்லை. குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் தொடங்கப்பட்ட ஒய் வடிவ மேம்பாலம் பணியானது மாற்றுப் பாதை இல்லாத காரணத்தால் தாமதமாகி வருகிறது. தச்சநல்லூர் ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்கும் பணி இனிதான் நடைபெற உள்ளது.
இதனால் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும வகையில் ஒருவழிப்பாதை மேம்பாலம் ஒன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. பாளை முருகன்குறிச்சி சிக்னலில் இருந்து மார்க்கெட் வரையில் ஒரு வழிப்பாதை மேம்பாலம் அமைத்தால் ஓரளவு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் எனவும் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து ஒற்றை தூண்களுடன் 5.5 மீட்டர் (16 அடி) உயரத்தில் 900 மீட்டர் தூரம் இந்த பாலம் கட்டி முடிக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.