முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரளா பித்தலாட்டம் செய்கிறது: வைகோ

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் உச்சநீதிமன்றம், 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைத்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான 5 உறுப்பினர் கொண்ட உயர் மட்டக்குழு அணையின் வலு குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழங்கிய 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் பென்னி குயிக் கட்டிய அணை வலுவாகவே இருக்கின்றது' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நில அதிர்வுகளால் அணைக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை; இனியும் அத்தகைய அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு வலுவாக உள்ளது; கட்டுமானத் தொழில்நுட்ப அடிப்படையிலும் வலுவாக இருக்கிறது; எனவே, தண்ணீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
அணை வலுவாக இருக்கிறது என்று ஐவர் குழு அறிவித்துவிட்டதால் புதிய அணை கட்டுவது குறித்த பேச்சுக்கே இடம் இல்லை. மாற்று யோசனைகள் எதையும் பரிசீலிக்க வேண்டிய தேவையும் இல்லை. 7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2,17,000 ஏக்கர் பாசனத்துக்கும், 85 லட்சம் மக்களின் குடிநீருக்கும், முல்லைப்பெரியாற்று தண்ணீரே வாழ்வாதாரம் ஆகும். அதை பராமரிக்கவும், பாதுகாக்கவும், நமக்குத் தான் உரிமை உண்டு. அணையை உடைப்பதற்கு, கேரள மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகள், திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றன.
உச்ச நீதிமன்ற ஐவர் குழு அறிக்கை அளித்ததற்கு பின்னர், "இரு மாநில அரசுகளும் இதைப்பேசி தீர்த்துக் கொள்ளலாம்'' என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில், வஞ்சகமான ஒரு கோரிக்கையை முன்வைத்து உள்ளது. தமிழக அரசு வழக்கறிஞர் அதை ஆணித்தரமாக நிராகரித்து உள்ளார்.
"நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்; இரண்டு பேரும் ஊதிச்சாப்பிடலாம் என்ற பித்தலாட்டத்தில் தற்போது கேரளம் ஈடுபடுகிறது. புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் திட்டக்குழுவோ, சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகமோ அனுமதி கொடுக்கக் கூடாது.
கேரள மாநில மக்களுக்கு அரிசி, பருப்பு, பால்,காய்கறி, பழம், ஆற்று மணல், அனைத்தையும் தமிழ்நாடு தான் அனுப்பி வைக்கின்றது. இதற்கு பின்னராவது கேரள அரசியல் கட்சிகளுடைய அநீதியான யோசனைகளையும், திட்டங்களையும் கேரள மக்கள் புறந்தள்ள வேண்டும். அணைக்கு ஆபத்து இல்லை; எந்தத் தீங்கும் நேராது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications