அத்வானியை குறி வைக்கும் சிபிஐ... கார்த்தி சிதம்பரத்தைத் துரத்தும் பாஜக!

பாபர் மசூதி விவகாரத்தில், அத்வானி உள்ளிட்டோருடைய தூண்டுதல் பேச்சுதான் மசூதி இடிப்புக்கு முக்கியக் காரணம், எனவே அவர்களை விசாரித்தேயாக வேண்டும், அவர்கள் வழக்கை சந்தித்தேயாக வேண்டும் என்று சிபிஐ கூறியுள்ளது. இதனால் பாஜக தரப்பு நெருக்குதலுக்குள்ளாகியுள்ளது.
ஆனால் மறுபக்கம் கார்த்தி சிதம்பரம் விவகாரத்தை இறுகப் பிடிக்க ஆரம்பித்துள்ளது பாஜக. ஏர்செல்-மாக்ஸிஸ் விவகாரத்தில் நிதி ஆதாரம் அடைந்தார் கார்த்தி சிதம்பரம் என்பது சுப்பிரமணியம் சாமி மூட்டி விட்டுப் போன புகையாகும். அதை தற்போது பாஜக ஊதிப் பெரிதாக்க ஆரம்பித்து விட்டது.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை இன்று எழுப்பிய பாஜக உறுப்பினர்களால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இன்று காலை லோக்சபா கூடியதும் பாஜக இந்த விவகாரத்தை எழுப்பியது. பாஜக உறுப்பினர்கள் கூட்டமாக கூடி நின்று ப.சிதம்பரத்தை நீக்கக் கோரி கோஷம் எழுப்பினர். சிலர் அவைத் தலைவர் மீரா குமார் இருக்கை முன்பு கூடி கோஷமிட்டனர். அரசு இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களை அமைதிப்படுத்த மீ்ரா குமார் முயன்றும் முடியவில்லை. இதையடுத்து பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சபை மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்தது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவையை நடத்த முயன்றார் மீரா குமார். ஆனால் எதிர்க்கட்சியினரின் அமளி தொடரவே பிற்பகல் 1 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதே நிலைதான் ராஜ்யசபாவிலும் காணப்பட்டது. முதலில் 10 நிமிடமும், பின்னர் 12 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோதும் அமளி ஓயவில்லை.












Click it and Unblock the Notifications