நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தை தவிர்க்க முன்வர வேண்டும்: பிரதமர் மன்மோகன்சிங் கோரிக்கை
மாநிலங்களவையில்..
முதலில் இந்திய நாடாளுமன்றத்தின் 60 ஆண்டுகால பயணம் தொடர்பான விவாதத்தை பிரதமர் மன்மோகன்சிங் மாநிலங்களவையில் தொடங்கி வைத்தார். நாடாளுமன்றத்தில் மாநிலங்க்ளவையின் பங்கு மிகவும் மகத்தானது என்றும் இந்த அவையில் அறிவார்ந்த வல்லுநர்கள் பலரும் இடம்பிடித்திருந்தனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
நாடு நெருக்கடியான சூழலில் இருந்தபோதெல்லாம் மாநிலங்களவை மத்திய அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்தது என்றும் நாடாளுமன்றக் கூட்டங்களில் கூச்சல் குழப்பங்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநிலங்களவையே தேவையில்லை என்றெல்லாம் விவாதிக்கப்பட்ட நிலையில் இப்போது அந்த கருத்தை மாநிலங்களவை பொய்யாக்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
மக்களவையில்....
மக்களவையில் சபாநாயகர் மீராகுமார், நாடாளுமன்றத்தின் 60-ம் ஆண்டு சிறப்புக் கூட்டம் பற்றி அறிமுக உரையாற்றினார். அதன் பின்னர் அவை முன்னவரும் நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றிய விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்ற மக்களவையானது எத்தனையோ விவகாரங்களுக்கும் பதற்றங்களுக்கும் தீர்வை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.. மாநில மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு நினைவுகூரத்தக்க முடிவுகள் இந்த மக்களவையில்தான் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் பிரணாப் தனது உரையில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற செயல்பாடுகளில் அதிரித்து வரும் ஒத்திவைப்புகளைக் குறைக்க உறுப்பினர்களாகிய நாம்தான் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அரசியல் சட்டத்தை உருவாக்கிய முன்னோர்களின் கனவை நனவாக்க நாம் பாடுபட வேண்டும் என்றார்.
கெளரவம்
நாடாளுமன்ற 60-ம் ஆண்டு சிறப்புக் கூட்டத்தையொட்டி முதலாவது மக்களவையிலும் தற்போதைய மாநிலங்களவையிலும் உறுப்பினராக உள்ள 91 வயது கெய்சிங் சிறப்பிக்கப்பட்டார். அதேபோல் முதலாவது, இரண்டாவது மற்றும் 9-வது மக்களவையில் உறுப்பின்ராக இருந்த ஜங்டேவும் இன்றைய கூட்டத்தில் சிறப்பிக்கப்பட்டார்.
கூட்டுக் கூட்டம்
இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட பின்னர் மைய மண்டபத்தில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். சிறப்பு தபால்தலைகள், நாணயங்களையும் அவர் வெளியிடுவார்.
இன்று மாலை 4 மணி வரை இந்த சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.