புதுச்சேரியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்த 2 பேர் பலி: எம்.எல்.ஏ. சாலை மறியல்
புதுச்சேரி: புதுச்சேரியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் வாந்தி பேதி ஏற்பட்டு இருவர் பரிதாபமாக பலியானார்கள்.
புதுவை வில்லியனூர் கொம்பாக்கம், ஒதியம்பட்டு போன்ற கிராமங்களில் கடந்த சில நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாக பொது மக்கள் புகார் கூறி வந்தனர். இந்த குடிநீரை குடித்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் 75க்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒதியம்பட்டைச் சேர்ந்த அய்யுப் என்பவரின் மனைவி ஷம்ஜாத் பேகம் (50) நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிள்ளை (70) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று காலை மேலும் 20 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ. நமச்சிவாயம் நேற்று காலை 11 மணியளவில் வில்லியனூர்-கொம்பாக்கம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார்கள் யஷ்வந்தையா, ரமேஷ் மற்றும் போலீசார் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பிறகே மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications