சொத்துக் குவிப்பு வழக்கு - ஜெகன் மோகன் ரெட்டி கைதானார்!
3 நாள் தீவிர விசாரணையின் இறுதியில் ஜெகன் மோகன் ரெட்டி கைதாகியுள்ளார். ஹைதராபாத்தில் வைத்து ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 3 நாட்களாக துருவித் துருவி விசாரிக்கப்பட்டு வந்தார். இதனால் ஹைதராபாத்தில் பெரும் பதட்ட நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது ஜெகன் மோகன் கைதாகியுள்ளார்.
40 வயதான ஜெகன் மோகன் ரெட்டி கடப்பா எம்.பி ஆவார். அவருக்கு சமீபத்தில் ஆந்திர உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது நினைவிருக்கலாம்.
முன்னதாக இன்று காலை காங்கிரஸ் எம்.பி. சப்பம் ஹரி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நானி, ரங்காராவ் மற்றும் தொண்டர்கள் புடை சூழ ஜெகன் மோகன் ரெட்டி, தில்குஷா கெஸ்ட் ஹவுஸுக்கு சிபிஐ விசாரணைக்காக வந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் அவருடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் சாய் ரெட்டியும் வந்திருந்தார். இன்றைய விசாரணைக்குப் பின்னர் ஜெகன் மோகன் கைதானார்.
முன்னதாக வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஜெகன் மோகன் ரெட்டியை சிபிஐ விசாரித்தது.
இந்த விசாரணை குறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், என்னையும், எனது கட்சியையும் ஒழிக்க காங்கிரஸ் சதி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
ஜெகன் மோகன் கைதைத் தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவுகிறது. குறிப்பாக கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் கலவரம் வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.