பெட்ரோல் இல்லை: பஸ், ரயில்களில் முண்டியடித்த கூட்டம்... மக்கள் படும் அவதி!
சென்னை: பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை என்பதால் டூவீலர்கள், கார்களில் அலுவலகம் போவோர், பிற பணிகளுககுப் போவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல், ஆட்டோக்களிலும், பஸ்களிலும், மின்சார ரயில்களிலும் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆட்டோக்களும் கூட பெட்ரோல், டீசல் கிடைக்காமல் தவித்ததால் பல ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் ஆட்டோ கிடைக்காமல் மக்கள் தவி்ப்புக்குள்ளானார்கள்.
பஸ்களிலும் ரயில்களிலும் வழக்கத்தை விட கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் தவிக்க வேண்டியதாயிற்று. சட்டை கசங்கி, வியர்வை வெள்ளத்தில் சிக்கி தொப்பலாக மாறிப் போனார்கள் மக்கள்.
ஒரு வேலைக்குப் போவதற்கு இந்தப் பாடா என்று மக்கள் புலம்பித் தவித்ததைப் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது.
தொலைதூரம் செல்லக்கூடிய கனரக வாகனங்களுக்கு போதுமான அளவு டீசல் கிடைக்காததால் அந்த வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாதவரம், மதுரவாயல், துறைமுகம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் நேற்று பெருமளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. லாரி டிரைவர்கள் கேன்களை தூக்கியபடி டீசலுக்காக அலைந்து திரிந்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
முற்றுகைப் போராட்டம்
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு தரைவழிப் போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் ஆர்.சுகுமார் கூறுகையில், மத்திய பெட்ரோலிய நிறுவனம் சமீபத்தில் விலையை அதிகளவில் உயர்த்திய பின்னும் தமிழகத்தில் டீசல், பெட்ரோல் விற்பனையை செயற்கை தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி உள்ள காரணத்தை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
உயர்த்திய பெட்ரோல் விலையை வாபஸ் பெற வேண்டும். இந்த தட்டுப்பாட்டு தொடரும் பட்சத்தில் அனைத்து லாரி, வேன், கார், பஸ் ஆகிய உரிமையாளர்கள் சேர்ந்து 3 எண்ணெய் நிறுவனங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.
டூவீலர் ஓட்டுவோரையும் இந்த ஸ்டிரைக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் படும் பாடுதான் கொடூரமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications