தமிழக ஆசிரியர்களுக்கு அமெரிக்க கல்வி முறை பயிற்சி அளிக்க தயார் - மேரிலாண்ட் அமைச்சர்

ஹூஸ்டனில் நடந்த தமிழ்நாடு அறக்கட்டளையின் 37வது தேசிய மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினகராக வந்திருந்தார் மெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் துணைச்செயலர் (தமிழகத்தின் அமைச்சர் பதவிக்கு இணையானது) டாக்டர் ராஜன் நடராஜன்.
மாநாட்டு மலரை வெளியிட்ட அவர், மேரிலாண்ட் கவர்னர் மார்ட்டின் ஓ மெய்லேவின் மாநாட்டு பிரகடனத்தை அறிவித்தார்.
தனது பேச்சின்போது, தமிழகத்திற்கும் மேரிலாண்ட் மாகாணத்திற்கும் தொழில் துறையில் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்டார். பயோடெக்னாலஜி, பார்மசூட்டிகல், சைபர் செக்யூரிட்டி, ஏர்லைன்ஸ், சோலார் டெக்னாலாஜி துறைகளில் மேரிலாண்ட் சிறந்து விளங்குகிறது. இந்த துறைகளில் தமிழகத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை கிடைக்கும். தமிழகத்திற்கும் நேரடி அன்னிய முதலீடுகள் பெருமளவில் வருவதற்கு வாய்ப்பு கிட்டும்," என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "இரு மாநிலங்களுக்கான வர்த்தகத்தை அதிகரிக்கும் முயற்சியில் , தமிழகம் – மேரிலாண்டுக்கு இடையே சகோதர உறவை ஏற்படுத்த ஆரம்பகட்ட பணிகள் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக சென்னை – பால்டிமோர் நகரங்களுக்கிடையேயான உறவையும் அடுத்து மாநிலங்களுக்கிடையே அதிகார மட்டத்தில் பரஸ்பர நல்லிணக்கத்தையும் உருவாக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதன் மூலம் தொழில்முனைவோரும், அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உருவாகும். நடைமுறை சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு எளிதான முறையில் வாணிபம் சிறக்கும்.
கல்வித்துறையில் ஒருங்கிணைந்து செயல்படுதல்
ஆசிய கண்டத்தில் இந்தியா, அமெரிக்கா போல் வளர்ச்சி பெற்ற நாடாக உருவெடுக்கும் நிலை உள்ளது. அந்த நிலையை அடைய இந்தியா கல்வித் துறையில் நிறைய முன்னேற்றம் அடைய வேண்டியதுள்ளது. இந்திய கல்வி அமைச்சர் கபில் சிபலின் கூற்றுப்படி இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகளில் 50 ஆயிரம் கல்லூரிகள் தேவை உள்ளது. இதனை அமெரிக்க – இந்திய கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சி மூலம் நிறைவேற்ற முடியும்.
ஊரகப் பகுதிகளில் பள்ளிகளை பொறுத்தவரை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதுள்ளது. அடுத்த்தாக, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும். தமிழக ஆசிரியர்கள் அமெரிக்கா வந்து பயிற்சி பெற்று அமெரிக்காவின் சிறந்த ஆசிரியர்களாக விளங்குகிறார்கள். அதே பயிற்சியை தமிழகத்தில் இருக்கும் ஆசிரியர்களுக்கு கொடுக்கும் போது, தமிழகத்திலும் அமெரிக்காவிற்கு நிகரான உயர் தரமான ஆசிரியர்களை உருவாக்க முடியும்.
தமிழக அரசு கோரிக்கை விடுத்தால், அமெரிக்க பயிற்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தமிழக ஆசிரியர்களுக்கு, தமிழகத்திலேயே வந்து பயிற்சி அளிக்க முடியும்.
இந்திய அமெரிக்க அமைச்சர்கள் பேச்சு வார்த்தை
ஜூன் 12ல் இந்திய கல்வித்துறை அமைச்சர் கபில் சிபல், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் கல்வித் துறையில் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்க வருகிறார்கள். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த சந்திபிற்கான ஏற்ப்பாட்டை செய்து வருகிறார். உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளான அமெரிக்கா, இந்திய அரசுகள் ஒருங்கிணைந்து கல்வித் தரத்தை உயர்த்த உறுதி கொண்டுள்ளன.
ஊரகப் பள்ளியில் கல்வி பயின்று வந்த தம்மால் அங்குள்ள கல்வியின் தரத்தையும் தேவைகளையும் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். தமிழக அரசு முன்வந்தால், ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக டாக்டர் ராஜன் உறுதியளித்தார்.
முத்துக்காடு முதல் பால்டிமோர் வரை
டாக்டர் ராஜன் நடராஜன் புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்துக்காடு என்ற சிற்றூரில் பிறந்து ஆரம்ப கல்வி பயின்றார். பின்னர் பக்கத்து கிராமமான காவேரி நகரில் உயர் நிலைப்பள்ளியும், புதுக்கோட்டை ராஜாஸ் கல்லூரியில் பி.எஸ்.சியும், பூண்டி புஷ்பம் கல்லூரியில் எம்.எஸ்.சியும் படித்தவர். சென்னை பல்கலைக் கழகத்தில் பயோடெக்னாலஜி துறையில் எம்.ஃபில், பி.எச்.டி படித்து விட்டு , ஆராய்ச்சிக்காக அமெரிக்கா வந்தார். பயோடெக்னாலஜி, பார்மசூட்டிகல், கம்யூட்டர் துறைகளில் சொந்தமாக நிறுவனங்கள் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார்.
மேரிலாண்ட் கவர்னரின் நேரடி உத்தரவு மூலம், வெளியுறவுத் துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டு கடந்த பதினோரு மாதங்களாக பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications