ஜனாதிபதி தேர்தலுக்கு மின்னணு எந்திரம் இல்லை: வாக்குச் சீட்டு தான்!
டெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கு வழக்கம் போல் வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படும் என்றும், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் ஜூலை 25ம் தேதி முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை மாதம் இரண்டாவது வாரம் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் அட்டவணையை வரும் 12ம் தேதி தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.
ஜனாதிபதியை லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்கள் மற்றும் மாநில சட்டசபைகளின் எம்.எ.ல்.ஏக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வர். நாடாளுமன்ற வளாகம் மற்றும் மாநில தலைநகரங்களில், பெரும்பாலும் சட்டமன்ற வளாகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறும்.
தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இது தொடர்பான ஆலோசனையை தலைமை தேர்தல் கமிஷன் நடத்தி வருகிறது.
வழக்கமாக ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படும். இந்த முறை மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான வாக்குச்சீட்டு முறையே பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி அறிவித்துள்ளார்.
ஓட்டுப் பதிவு முடிந்ததும் மாநிலங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் டெல்லிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு வைத்து தான் மாநிலம் வாரியாக பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்படும்.












Click it and Unblock the Notifications