மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை-ஷாருக்கான் பல்டி

மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 5 தொடரின் லீக் போட்டி நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டிக்கு சென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான் ரகளையில் ஈடுப்பட்டதாக, மும்பை மைதானத்திற்கு நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. போட்டியின் முடிவில் பேசிய நடிகர் ஷாருக்கான், மும்பை மைதானத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு தான் வருந்துவதாக தெரிவித்தார். இதனால் மும்பை கிரிக்கெட் வாரியத்திடம், ஷாருக்கான் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அந்த செய்தியை நடிகர் ஷாருக்கான் மறுத்துள்ளார். மும்பை மைதானத்தில் நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது
ஐபிஎல் 5 தொடரில் எங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று கருதிய போது, அதை சவாலாக எடுத்துக் கொண்டேன். இந்த வெற்றி எனது வாழ்வில் மிகப்பெரிய பாடமாகும்.
மும்பை மைதானத்தில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட விவகாரம் குறித்து நான் விவரமாக பேச விரும்பவில்லை. ஒரிடத்தை நான் சென்ற பிறகு என்னை குறித்து எனக்கு விருப்பம் இல்லாத செய்தியை ஒருவர் தெரிவிக்கலாம். என்னுடைய தற்போதைய நிலையில் சில செய்திகளை கேட்காமல் இருக்க, காதுகளுக்கு பஞ்சு வைத்து கொள்வது நல்லது என்று கருதுகிறேன். இதற்காக பொது இடங்களுக்கு செல்வதை குறைத்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.
மும்பை மைதானத்தில் நடந்த சம்பவத்திற்காக, நான் பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டேன். இதற்காக நான் மும்பை கிரிக்கெட் வாரியத்திற்கு எதிரானவன் என்று பொருள் கொள்ள கூடாது. எனது பேச்சை தவறாக புரிந்து கொள்ளும் நபர்களுக்கு நான் எதிரானவன். மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்பு கேட்டேன் என்ற செய்தியில் உண்மையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications