வெள்ளியை உருக்க வந்து.. கழுத்தில் கத்தி போட்டு தங்கம் கொள்ளை
மதுரை: மதுரையில் நகை வியாபாரியின் கழுத்தை அறுத்து 36 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மதுரை நேதாஜி சாலை ஜான்சிராணி பூங்கா அருகே வசித்து வருபவர் விலாஸ். தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை உருக்கி வியாபாரம் செய்யும் இவரிடம் மதுரை புதூரைச் சேர்ந்த மணி வாடிக்கையாளராக அடிக்கடி வந்து போவார்.
விலாஸின் கடைக்கு நேற்று சென்ற மணி 300 கிராம் மதிப்புள்ள வெள்ளியை கம்பியாக உருக்கி தரும்படி கேட்டார். பின்னர் வெள்ளி கம்பிகளுடன் புறப்பட்டு சென்ற மணி மீண்டும் விலாஸைத் தேடிச் சென்றுள்ளார். மணியின் நடவடிக்கைகள் சந்தேகம் தரவே விலாஸ் தாம் வீட்டுக்குள் செல்வதாகக் கூறி எழுந்திருக்கிறார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் விலாஸின் கழுத்தை அறுத்த மணி, அங்கிருந்த 36 பவுன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளியை அமுக்கிக் கொண்டு எஸ்கேப்பானார்.
ரத்த வெள்ளத்தில் அலறிக் கிடந்த விலாஸை பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ரூ10 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் ஓடிய மணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.