கொலையை அம்பலப்படுத்தியதால் மனைவியை வழியெல்லாம் அடித்து உதைத்த முருகன்!
விழுப்புரம் நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சேர்ந்த முருகன் தனது நண்பர் சேகர், அவரது மகள் லாவண்யா, மருமகன் சிலம்பரசன் ஆகியோரைக் கொலை செய்து புதைத்து விட்டார். இதை முருகனின் மகள் பார்கவி ஜீ தமிழ் டிவியின் டாக் ஷோ மூலம் அம்பலப்படுத்தினார். இதையடுத்து போலீஸார் மூன்று பேரின் எலும்புக் கூடுகளையும் தோண்டி எடுத்தனர்.
டாக் ஷோவில் பார்கவி தனது காதலர் சதீஷுடன் கலந்து கொண்டார். அவர்களுடன் முருகன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஷோவி்ன்போது தனது தந்தை குறித்து பார்கவி பரபரப்புத் தகவல்களை வெளியிட்டார். பார்கவி கூறுகையில், அடிக்கடி எனது தாயார் ராஜேஸ்வரி என்னிடம் கூறும்போது, உனது தந்தை ஒரு இளம் தம்பதியையும், அந்தப் பெண்ணின் தந்தையையும் விஷம் வைத்துக கொன்று வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றுக்கு அருகே புதைத்து விட்டார் என்று கூறுவார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ராஜேஸ்வரி, நான் கொலையை நேரில் பார்க்கவில்லை. ஆனால் என்னுடன் எனது கணவர் சண்டை போடும்போதெல்லாம், அவர்களைக் கொன்றது போல உன்னையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுவார் என்றார்.
இந்த நிகழ்ச்சி பதிவானபோது, முருகன் தான் அப்பாவி என்று கூறியுள்ளார். பின்னர் தனது மனைவியுடன் ஊருக்குக் கிளம்பினார். போகும் வழியில் பஸ்ஸில் வைத்தே தனது மனைவியை பலமுறை அடித்துள்ளார். மகள் பேச்சை மறுக்காமல் ஆதரித்துப் பேசுகிறாயா என்று கேட்டு அடித்துள்ளார்.
பின்னர் திண்டிவனத்தில் அவர் இறங்கி வி்ட்டார். அப்போது மனைவியிடம், நீ என்னை மறுபடியும் உயிரோடு பார்க்க முடியாது என்று கூறியபடி சென்றுள்ளார். அதன் பி்ன்னர் இதுவரை முருகன் வரவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது கூட சந்தேகமாக உள்ளது.