புதுக்கோட்டை இடைத்தேர்தல் கருத்து கணிப்புக்கு தடை: பிரவீண் குமார்
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தல் குறித்து பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் கருத்து கணிப்பு வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஜூன் 12ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் வாக்களித்துவிட்டு வருவோரிடம் கருத்து கணிப்பு நடத்தவோ, முடிவுகளை வெளியிடவோ கூடாது.
மேலும், தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் 10ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி அடுத்த 48 மணி நேரத்திற்கு எவ்விதமான கருத்து கணிப்பு முடிவுகளை மின்னணு ஊடகங்களும் வெளியிடக் கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.