சிரிய அதிபர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தல்
இஸ்தான்புல்: சிரியாவில் கிளர்ச்சியாளர்களை நாள்தோறும் நூற்றுக்கணக்கில் அந்நாட்டு ராணுவம் படுகொலை செய்து வருவதைத் தொடர்ந்து சிரிய அதிபர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தியுள்ளனர்.
சிரிய அதிபர் பசீர் அல் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியில் இதுவரை மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அண்மை நாட்களாக நாள்தோறும் நூற்றுக் கணக்கானோர் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள்தான்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய ஹிலாரி சிரியா விவகாரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சிரியாவில் நடந்து வரும் கலவரம் வருத்தமளிக்கிறது. தொடர்ந்து பல உயிர்கள் பறிக்கப்பட்டு வருவதால் சிரியாவில் அரசியல் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சார்பாக நடத்தப்படும் சிரியாவின் அரசியல் குறித்த மாநாட்டில் அமெரிக்கா, ரசியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபடுவதில் ஆர்வத்துடன் இருக்கின்றன.
மேலும், சிரியாவில் அரசியலமைப்பை மாற்றி அமைக்க இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். இதற்கு அமெரிக்கா முழுமையாக ஒத்துழைக்கும். சிரியாவில் ஜனநாயக ஆட்சி அமைக்க ஆசாத் பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அதில் ஹிலாரி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications