நித்தியானந்தாவை ஜூன் 14க்குள் கைது செய்ய கர்நாடக தலைவர்கள் கெடு!

கர்நாடகத்தில் நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு மதத் தலைவர்கள் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் போராட்டங்கள் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளன.
கடந்த சில நாட்களாக நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டபடி உள்ளன. கொடும்பாவி எரிப்பு, தர்ணா,ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என நடந்தபடி உள்ளது.
இந்த நிலையில் பிடதியில் உள்ள மஞ்சநாயக்கன ஹள்ளி கிராமத்தில் உள்ள கோத்தி ஆஞ்சநேயசாமி கோவிலிலிருந்து நித்தியானந்தாவின் தியான பீடம் வரை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பேரணியாக சென்றனர்.
இருப்பினும் நித்தியானந்தாவின் தியான பீடம் பகுதியில் போலீஸ் தடை உத்தரவு அமலில் இருப்பதால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி திரும்பிப் போகுமாறு கூறினர்.
அப்போது போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய கலிகா மட மடாதிபதி ரிஷிகுமார் கூறுகையில், இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் உயரிய அந்தஸ்தில் வைக்கப்பட்டுள்ளனர். பெண்களைப் போற்றுவது நமது கலாச்சாரம். ஆனால் நித்தியானந்தா பெண்களை அவமதிக்கும் வகையிலேயே நடந்து வருகிறார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஜூன் 14ம் தேதிக்குள் இதை போலீஸார் செய்ய வேண்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நித்தியானந்தாவுக்கு எதிராக போராடி கைதான அத்தனை பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஜூன் 14ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நித்தியானந்தா ஆசிரமத்தைப் பூட்டி சீல் வைத்து ஆசிரமத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.
கர்நாடக நவ நிர்மான் வேதிகே தலைவர் பீமா சங்கர் பாட்டீல் கூறுகையில், தியானபீடம், சட்டவிரோத செயல்களின் கூடாரமாகி விட்டது. நித்தியானந்தாவை கர்நாடகத்தை விட்டே விரட்டியடிக்க வேண்டும் என்றார்.
நித்தியானந்தா பேனர்கள் அகற்றம்
இதற்கிடையே, நித்தியானந்தாவை வாழ்த்தியும், போற்றியும் பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களையும், பிளக்ஸ் பேனர்களையும் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications