டெசோவின் புதிய உறுப்பினர் திருமாவளவன்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. டெசோ அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
1985ம் ஆண்டு மே 15ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு என்ற அந்த அமைப்பு, தமிழ் ஈழத்துக்காக போராடி வரும் தமிழர்களுக்கு ஆதரவு திரட்ட அமைக்கப்பட்டதாகும்.
திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி மற்றும் பழ. நெடுமாறன் ஆகியோர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த அந்த அமைப்பு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தமிழர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை உருவாக்கியது. மதுரையில் பிரமாண்ட மாநாட்டையும் நடத்தியது. நாளடைவில் இந்த இயக்கம் செயல்படாமல் முடங்கிப்போனது.
இந்த நிலையில் தற்போது டெசோ அமைப்பு மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது. இதன் தலைவராக திமுக தலைவர் கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர்.
ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெயர் சேர்க்கப்படவில்லை. இதனால் தமிழீழ ஆதரவாளர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மூத்த நிர்வாகிகளும் சோர்ந்து போனார்கள். தமிழீழ விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகளை திமுக ஒதுக்குவது ஏன் என புரியாமல் தவித்துப் போனார்கள்.
இந்த நிலையில் டெசோ அமைப்பில் தொல்.திருமாவளவன் எம்.பி. உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.
டெசோ அமைப்பு மத்திய அரசுக்கு எதிராக திடீர் முடிவுகளையும், அதிரடி தீர்மானஙக்ளையும் எடுக்க நேரிடலாம். இதில் தொல்.திருமாவளவன் நேரடியாக கலந்து கொண்டால் அவரது எம்.பி. பதவிக்கு சிக்கல் வரலாம் என்று கூறப்பட்டதால் தான் முதலில் அவருக்கு கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. தற்போது அது போன்ற பிரச்சனைகள் ஏதும் வர வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே அவருக்கு உரிய பிரநிதித்துவம் வழங்கப்பட்டதுள்ளதாம்.
இந்நிலையில் இது குறித்து டெசோ அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு' எனும் அமைப்பு மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியால் கட்டமைக்கப்பட்டு ஈழத் தமிழரின் நலனுக்காக ஓய்வு ஒழிச்சலின்றிப் பணியாற்றி வருவதறிவோம். இவ்வமைப்பின் முதல் கலந்துரையாடல் கூட்டம் 30-4-2012 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டெசோ' அமைப்புக்குத் தலைவராக திமுக தலைவர் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வமைப்பில் க.அன்பழகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வமைப்பில், தற்போது மேலும் ஒரு உறுப்பினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை திமுக தலைவர் கருணாநிதி நியமித்துள்ளார்.
அந்த அறிவிப்பின்படி, டெசோ' அமைப்பின் நிர்வாகிகள் விவரம் வருமாறு:
தலைவர் - தி.மு.க. தலைவர் கருணாநிதி. உறுப்பினர்கள் - க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன்.
மேலும், விழுப்புரத்தில் 5-8-2012 அன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள டெசோ' மாநாட்டுக்கு வரவேற்புகுழு அமைக்கப்பட்டுள்ளது.
அதில், வரவேற்புக்குழு தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்படுவார். செயலாளர்களாக க.பொன்முடி, கவிஞர் கலி.பூங்குன்றன், ரவிக்குமார், வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வக்கீல் அசன் முகம்மது ஜின்னா செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 பொற்காசு:
இதற்கிடையே, வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி திருமாவளவன் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை அக்கட்சியினர் பொன்விழாவாக நேற்று சென்னையில் கொண்டாடினர். அந்த விழாவில் திருமாவளவனுக்கு கட்சி நிர்வாகிகள் 50 பொற்காசுகள் வழங்கினர். கவிஞர் அறிவுமதியின் பாடல்கள் அடங்கிய எரிமலை சிரிப்பே என்ற சிறப்பு சி.டி. வெளியிடப்பட்டது. இது தவிர கவியரங்கம், இசை, நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.












Click it and Unblock the Notifications