மதுரை காவல்துறை துணை ஆணையர் பேச்சிமுத்து பாண்டியனுக்கு பிடிவாரண்ட: ஈரோடு கோர்ட் அதிரடி
ஈரோடு: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மதுரை காவல்துறை துணை ஆணையர் பேச்சிமுத்து பாண்டியனுக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2009 ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் ராஜாமணி என்பவர் பலியானார். அப்போது வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளராக இருந்த பேச்சிமுத்து பாண்டியன் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கு ஈரோடு முதன்மை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளராக இருந்த பேச்சிமுத்து பாண்டியன் பதவி உயர்வு பெற்று மதுரை திலகர் திடல் குற்றப் பிரிவு துணை ஆணையராக உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. மேலும், பல முறை நீதிமன்ற சம்மனையும் வாங்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து ஈரோடு முதன்மை தலைமை நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன் பேச்சிமுத்து பாண்டியனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.