9-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் பிரிவினைவாதத்தை திணிக்கும் பகுதிகளை நீக்க ராமகோபாலன் கோரிக்கை
சென்னை: தமிழ்நாட்டுப் பாடல்நூல் நிறுவனத்தின் 9-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் இடம்பெற்றுள்ள பகுதிகளை நீக்க வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள 9-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் 95-ம் பக்கத்தில், கூடுமானவரையில் தமிழ்நாட்டில் தமிழ் தொழிலாளர்களால் செய்யப்பட்ட பொருள்களையே வாங்கு'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பாடம் முழுவதும் தமிழ்நாடு தனி தேசம் என்று பொருள் தொனிக்குமாறு எழுதப்பட்டு இருக்கிறது.
இது, இந்திய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் எண்ணத்தை மாணவர் மனதில் திணிப்பது போல உள்ளது. இந்திய சாசனத்தின் அடிப்படைகளுக்கு விரோதமானது. இது தேச விரோத செயல் ஆகும்
நீதிக்கட்சி, திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளின் கொள்கைகளை மாணவர்கள் மனதில் திணிப்பதற்கு 9, 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 10-ம் வகுப்பு நூலில், தமிழகம் செய்த தவத்தின் பயனாக அவதரித்தவர் தந்தை பெரியார்' என்று ஈ.வெ.ராவை கடவுளின் அவதாரம் போல சித்தரித்துள்ளனர்.
ஒருவர் எழுதிய நாவல், கட்டுரை கருத்தை பாடத்திட்டத்தில் சேர்க்கும்போது மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். இளமையில் கற்பது பசுமரத்து ஆணி போல பதியும். மாணவர்கள் படிக்கும் பாடம் என்பது அவர்களின் எண்ணத்தை உருவாக்கும் ஒரு பகுதி.
அதில் பிரிவினை எண்ணத்தையும், பாகுபாட்டு உணர்வையும் திணிப்பது தேச விரோத செயல் ஆகும். தேச விரோத கருத்துகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும்.