மீண்டும் கலாமுடன் பாஜக குல்கர்னி சந்திப்பு: அத்வானியும் தொலைபேசியில் பேச்சு

இது தொடர்பாக விவாதிக்க நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்பு நேற்று 3 வாய்ப்புகள் இருந்தன. பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது?அல்லது சங்மாவை ஆதரிப்பது? அல்லது கலாமை நிறுத்துவது? என்ற 3 வாய்ப்புகளில் கூட்டணிக் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்து இருந்தது.
இந்நிலையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத், அப்துல் கலாமை மீண்டும் நிறுத்தலாம் என்று நேற்று ஹரித்வாரில் கூறியிருந்தது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இதேபோல் அப்துல்கலாமை இன்று அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவிக்க மமதா பானர்ஜியும் முடிவு செய்திருக்கிறார்.
இந்த சூழலில் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது பாஜகவின் காய்நகர்த்தல்கள். இன்று காலையில் பாஜக மூத்த தலைவர் சுதீந்தரா குல்கர்னி, அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் மீண்டும் பிற்பகலிலும் கலாமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் குல்கர்னி.
அதே போல பாஜக தலைவர் அத்வானியும் கலாமுடன் தொலைபேசியில் பேசினார். இதைத் தொடர்ந்து அனேகமாக கலாமுக்கான ஆதரவை பாஜக உறுதி செய்திருப்பதாகவே தெரிகிறது.
திமுக, அதிமுவுக்கு சிக்கல்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல்கலாம் வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் சங்மாவை ஜெயலலிதா ஆதரிப்பாரா? அல்லது பிரியத்துக்குரிய பாஜகவின் ஆதரவு பெற்ற கலாமை ஆதரிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதைவிட சிக்கலான நிலைமை திமுகவுக்குத்தான். தமிழினப் பகைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக வாக்களிப்பதா? தமிழரான கலாமுக்கு ஆதரவளிப்பதா? என்ற கேள்வி திமுக முன் உள்ளது. திமுகவின் தேர்வு பிரணாப் முகர்ஜியாக இருந்தால் நிச்சயம் அது அந்த கட்சிக்கு வரலாற்றுப் பின்னடைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications