ஜெ.வுக்கு தோஷம், அதனால்தான் 1006 பேருக்கு இலவசக் கல்யாணம்... சொல்கிறார் ராமதாஸ்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு முதல்வர் இன்று இலவசத் திருமணங்களை செய்துவைத்துள்ளார். மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சிக்கா கோடிக்கணக்கில் அரசுப் பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது.
முதல்வரை வரவேற்று சென்னை போயஸ் தோட்டத்தில் தொடங்கி திருவேற்காடு வரை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு சாலை நெடுகிலும் வாழை மரங்களும்,தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. இலவச திருமணம் என்ற பெயரில் ஆடம்பர விழாக்களை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை வீணாக செலவழிப்பது சரியல்ல.
முதல்வருக்கு ஏற்பட்டுள்ள தோஷக் கோளாறை போக்குவதற்குத்தான் இந்த இலவசத் திருமணம் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் தீர்க்கப்படாத பிரச்னைகள் எவ்வளவோ உள்ளன. தமிழகத்தில் உள்ள எத்தனையோ கோவில்களில் ஒருவேளை பூஜைக்குக் கூட வழிஇல்லாத நிலையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுவது நியாயம்தானா என்பதை ஆட்சியாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இனியாவது தனி மனிதர்களின் நலனுக்காக இதுபோன்ற வீண் நிகழ்ச்சிகளை நடத்துவதை விட்டுவிட்டு உண்மையான வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications