துப்பாக்கியை காட்டி மிரட்டி தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை: மீனவர்கள் கண்ணீர்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி விரட்டியுள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தாக்குவதும், அடித்து விரட்டுவதுமாக இலங்கை கடற்படை அட்டூழியம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 800 விசைப்படுகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சூறாவளி வீசியதால் கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாது மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறிய கப்பல்களில் அந்த பக்கம் ரோந்து வந்தனர். ராமேஸ்வரம் மீனவர்களைப் பார்த்ததும் அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி மீனவர்களை அங்கிருந்து விரட்டினர்.
இதில் பயந்துபோன மீனவர்கள் மீன் பிடிப்பதை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக கரைக்கு திரும்பி வந்தனர்.
கரை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில்,
இலங்கை கடற்படையினர் எங்களை மீன் பிடிக்க விடாமல் தொடர்ந்து விரட்டியடிக்கின்றனர். இதை மத்திய-மாநில அரசுகளும் கண்டுகொள்வதில்லை. இதனால் எங்கள் வாழ்க்கை தான் கேள்விக்குறியாகியுள்ளது என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications