பேச்சுவார்த்தைக்கு வந்த சிபிஐ நிர்வாகிகளை கைது செய்வதா?: தா.பாண்டியன் கண்டனம்
சென்னை: திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றிய 200-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கராசு, செங்கம் நகரச் செயலாளர் சர்தார் உள்பட 6 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையின் இந்தத் தவறான நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரையும் விடுவிப்பதுடன், அவர்கள் மீதான் பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.