நித்தியானந்தாவை வெளியேற்ற மதுரை ஆதீன முற்றுகைப் போராட்டம்: தேவர்குல கூட்டமைப்பு
மதுரை: பாலியல் புகாரில் சிக்கி, கர்நாடகத்திலிருந்து விரட்டப்பட்டு மதுரை ஆதீனத்தை ஆக்கிரமித்து தங்கியிருக்கும் நித்தியானந்தாவை வெளியேற்ற வலியுறுத்தி ஜூன் 27ம் தேதி மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று தேவர்குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவரான சண்முகையா பாண்டியன் இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலியல் புகாரில் சிக்கிய நித்தியானந்தாவை கர்நாடகத்திலிருந்து விரட்டியடித்துள்ளனர். அவரது மடத்திற்கு சீல் வைத்து விட்டனர்.
பிடதி ஆசிரமத்திலிருந்து விரட்டப்பட்ட நித்தியானந்தா தற்போது மதுரை ஆதீன மடத்தை ஆக்கிரமித்து தங்கியுள்ளார். பெருமளவில் பணம், ஆவணங்களை அவர் கடத்தி வந்துள்ளார். பாலியல் புகாரில் சிக்கிய அவர் மதுரை ஆதீன மடத்தில் தங்கக் கூடாது, அவரை வெளியேற்ற வேண்டும்.
இதை வலியுறுத்தி இந்து மத அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ஜூன் 27ம் தேதி மதுரை ஆதீன மடத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றார்.