கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் கேரள சட்டசபைக்கு வந்த சிபிஎம் எம்.எல்.ஏ.
திருவனந்தபுரம்: மாணவர்களின் போராட்டத்தை போலீசார் எவ்வாறு அடக்குகின்றனர் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க சிபிஎம் எம்.எல்.ஏ. ஜெயராஜன் கேரள சட்டசபைக்கு 2 கண்ணீர்ப்புகை குண்டுகளை எடுத்து வந்தார்.
கடந்த 14ம் தேதி கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேசுவதாக இருந்த இடத்தில் எஸ்எப்ஐ தலைவர் அனீஷ் ராஜனை கொன்றவர்களை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும் மாணவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை கேரள சட்டசபை கூடி நடந்து கொண்டிருந்தது. அப்போது சிபிஐ எம்.எல்.ஏ. ஜெயராஜன் எழுந்து 2 கண்ணீர்ப்புகை குண்டுகளை காட்டினார். இதனால் சட்டசபையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு சட்டசபை தலைவர் ஜி. கார்த்திகேயன் மற்றும் உள்துறை அமைச்சர் திருவாச்சூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபைக்குள் வெடிபொருட்களை கொண்டு வருவது விதிமுறைக்கு புறம்பானது என்று கூறி அவற்றைப் பறிமுதல் செய்ய அவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தை நசுக்கிய விதம் குறித்துப் பேச சட்டசபை நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் கோரி இடது சாரிகள் வலியுறுத்தினர்.
ஆனால் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர கார்த்திகேயன் மறுத்ததால் இடது சாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
மாணவர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததுடன் கல்லை வீசியதால் தான் போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்ய வேண்டியிருந்தது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications