தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: குருவாயூர் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தம்
குருவாயூர்: பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து குருவாயூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு ஏற்கனவே பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. இதையடுத்து கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்தவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் கேரள அரசு முடிவு செய்தது. அதன்படி கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, பிரகாரம் உள்பட பல இடங்களில் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கென்று கட்டுப்பாட்டு அறை ஒன்றும் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கோவிலுக்கு வெளியே, கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம், தனியார் பேருந்து நியைம், ரயில் நிலையம், முக்கிய சாலை சந்திப்புகள், என்று குருவாயூரில் பல இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதற்காக கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் குருவாயூரில் எந்தவித பதட்டமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் மாநில அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விரைவில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பது தொடர்பாக உயர்மட்டக் குழு அமைக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications