புதுக்கோட்டை எம்எல்ஏவாக கார்த்திக் தொண்டைமான் பதவியேற்பு

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முத்துக்குமரன் மரணமடைந்ததை அடுத்து கடந்த 12ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. அதில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வெற்றி பெற்றார்.
அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி இன்று சென்னை சட்டமன்றத்தில் சபாநாயகர் அறையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சபாநாயகர் ஜெயக்குமார், துணை சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் சபாநாயகர் அறையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கார்த்திக் தொண்டைமான் எம்எல்ஏகளுக்கான உறுதிமொழியை கூறி பொறுப்பேற்றுக் கொண்டார். சபாநாயகர் ஜெயக்குமார் புதிய எம்எல்ஏவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து கார்த்திக் தொண்டைமான் எம்எல்ஏ முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்மூலம் சட்டசபையில் அதிமுகவின் பலம் 150 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications