மாறி மாறி பேட்ஜ் குத்திக் கொண்ட தயாநிதி மாறன், ராசா -செயற்குழு கூட்டத்தில் 'உருக்கமான' காட்சிகள்!
அதிமுக அரசின் சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும், அதைத் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசிக்கவும் இன்று அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் அவசர செயற்குழுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் கருணாநிதி தலைமையில் அனைவரும் பங்கேற்றுள்ளனர். கூட்டத்துக்கு வந்தவர்கள் முதலில் நுழைவாயிலில் இருந்த அட்டென்டென்ஸில் தங்களது கையெழுத்துக்களைப் போட்டு விட்டு உள்ளே சென்றனர். மேலும் பேட்ஜும் அணிந்து கொண்டனர்.
மாக்சிஸ் ஊழல் புகார் தொடர்பாக பதவி விலகிய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் வந்தபோது, ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கி பதவியிழந்த தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் உள்ளே நுழைந்தார். இதையடுத்து அந்த இடத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருவரும் பரஸ்பரம் வரவேற்று கை குலுக்கிக் கொண்டனர். பின்னர் ராசாவுக்குரிய பேட்ஜை கையில் எடுத்த தயாநிதி மாறன் அதை ராசாவுக்கு குத்தி விட்டார்.
அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட ராசா, பதிலுக்கு தயாநிதி மாறனுக்கு பேட்ஜ் குத்தினார். இப்படி இருவரும் மாறி மாறி பேட்ஜ் குத்திக் கொண்டதை கட்சியினர் சிரித்தபடி பார்த்து ரசித்தனர்.