அழகிரியைத் தவிர அத்தனை திமுக 'தலை'களும் அறிவாலயத்தில் ஆஜர்!
அதிமுக ஆட்சியில் தொடர்ந்து திமுகவினர் வேட்டையாடப்பட்டு வருவதைக் கண்டித்தும், அதை எதிர்த்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க இன்று சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருப்பதால் அறிவாலய வளாகத்தில் காலையிலிருந்தே கட்சியினர் திரள ஆரம்பித்தனர். வழக்கமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதுதான் இப்படிக் கூட்டம் கூடும். ஆனால் இன்று காலை முதலே திமுகவினர் பெரும் எதிர்பார்ப்புடன் கட்சிதலைமை அலுவலக வளாகத்தில் கூடினர்.
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், தயாநிதி மாறன், கனிமொழி, ராசா உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் என அத்தனை முக்கியஸ்தர்களும் வந்து விட்டனர்.
வீரபாண்டி ஆறுமுகம் போன்ற கைதாகி உள்ளே இருப்பவர்கள் மட்டுமே வரவில்லை.அதேசயம், வெளியே இருக்கும் மு.க.அழகிரி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது கட்சியினரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இன்றைய கூட்டத்தில் வராத ஒரே தலைவர் யார் என்றால் அது அழகிரி மட்டுமே. அவர் மதுரைப் பக்கம் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.
மிக மிக முக்கியமான இக்கூட்டத்திற்கு அழகிரி வராமல் போனது அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.