நீங்கள் கஞ்சா வியாபாரியா?, அப்படியானால் உருகுவே உங்களை அன்புடன் வரவேற்கிறது!!!
மான்டிவீடியோ: உருகுவே அரசு கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கி, அதன் விற்பனையை அங்கீகரிக்கவும் தீர்மானித்துள்ளது.
கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களின் அட்டகாசத்தால் உருகுவே நாடு உருகிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கஞ்சாவின் அட்டகாசம்தான் உருகுவேயில். சட்டவிரோதமாக கஞ்சா வளர்ப்பது, விற்பது, கடத்துவது, அதுதொடர்பான அடிதடிகள், சண்டைகள் என நாடே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆண்டுக்கு 75 மில்லியன் டாலர் அளவுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சந்தையில் பணம் புழங்குகிறதாம். ஆனால் அரசுக்கு இதில் ஒரு பைசா கூட கிடைப்பதில்லை. அத்தனையும் கள்ளத்தனமாக நடைபெறும் வியாபாரமாகும்.
இதையடுத்து கஞ்சாவை சட்டப்பூர்வமாக அனுமதிக்க உருகுவே அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி கஞ்சா விற்பனை இனிமேல் அங்கு அனுமதிக்கப்படும். கஞ்சா விற்பனையாளர்கள் இதுதொடர்பாக அரசுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும், அரசுக்கு விற்பனை வரி கட்ட வேண்டும். அதேபோல கஞ்சாவைப் பயன்படுத்துவதற்கு அரசிடம் அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு மட்டுமே கஞ்சா விற்க அனுமதிக்கப்படும்.
கஞ்சாவை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் அரசுக்கு பெருமளவில் வரி வருவாய் கிடைக்கும் என்று அந்த நாடு கணக்குப் போட்டுள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.