சென்னை சிறுவன் கொலையில் திருப்பம்.. மாமியாரின் கள்ளக்காதலனுக்குத் தொடர்பு!
சென்னை: சென்னையில் 5 மாத கைக்குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பமாக, தனது மாமியாரின் கள்ளக்காதலை மருமகள் கண்டுபிடித்து தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்தக் கள்ளக்காதலன்தான் குழந்தையைக் கொன்றது தெரிய வந்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (28), எலக்ட்ரீஷியன். மனைவி கோமதி (26). இவர்களுக்கு 5 மாதங்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்தது, குழந்தைக்கு கோகுல் என பெயரிட்டிருந்தனர்.
கடந்த 20ம் தேதி இரவு வீட்டிலிருந்த கோகுலைக் காணவில்லை. அடுத்த நாள் அதிகாலை, வீட்டின் அருகே கழிவுநீர்க் கால்வாயில் கோகுலின் உயிரற்ற உடல் கிடந்தது.
இது நரபலியாக இருக்கலாமோ என்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நிச்சயம் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என போலீஸார் மோப்பம் பிடித்தனர்.
இதையடுத்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிப்பட்டன...
கோமதி ஏற்கனவே கல்யாணமாகி கணவரைப் பிரிந்தவர். அவருக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகள் உள்ளாள். இந்த நிலையில் ராஜேஷுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். அதில்தான் கோகுல் பிறந்தான்.
இந்த நிலையில் ராஜேஷின் தாயார் குப்பம்மாளுக்கும், அவரது உறவினர் கர்ணன் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வரை ராஜேஷும், கோமதியும் தனியாகவே வசித்து வந்தனர். பிறகுதான் அம்மாவுக்குத் துணையாக இருக்கட்டுமே என்று மனைவியுடன் தாய் வீட்டுக்கு குடியேறினார் ராஜேஷ்.
இந்த நிலையில் இடையில் ஒரு நாள் குப்பம்மாளும், கர்ணனும் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து விட்டார் கோமதி. இதனால் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து கோமதியை கர்ணன் மிரட்டியுள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.
கடந்த 20ம் தேதி இரவு வீட்டில் குப்பம்மாள், கோமதி, ராஜேஷின் தங்கை ராஜலட்சுமி ஆகியோர் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது போதையில் வந்துள்ளார் கர்ணன். இதைப் பார்த்த கோமதி, கர்ணனை கடுமையாக திட்டியுள்ளார். இதையடுத்து கர்ணன் போய் விட்டார்.
ஆனால் இரவு மீண்டும் திரும்பி வந்த அவர் கோமதியின் குழந்தையை தூக்கிக் கொண்டு போய் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டார்.
இதையடுத்து கர்ணனைத் தேடி போலீஸார் சென்றனர். அவர்களிடம் உடை மாற்றி விட்டு வருகிறேன் என்று கூறிச் சென்ற கர்ணன் நைசாக தப்பி விட்டார். இதையடுத்து அவரைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications