நாளை நிதியமைச்சர் பதவிலிருந்து விலகும் பிரணாப்-40 வருட அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது!

நிதியமைச்சர் பதவியிலிருந்து மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், இதர பொறுப்புகளிலிருந்தும் பிரணாப் முகர்ஜி நாளை விலகுகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார் பிரணாப் முகர்ஜி. 28ம் தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதற்கு வசதியாக அவர் அரசியலை விட்டும், அமைச்சர் பொறுப்பிலிருந்தும் நாளை விடைபெறுகிறார்.
1978ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியில் உறுப்பினரானார் பிரணாப் முகர்ஜி. அன்று முதல் இன்று வரை கட்சியின் அசைக்க முடியாத முக்கியத் தலைவராக இருந்து வருகிறார்.
1969ம் ஆண்டு முதல் முறையாக எம்.பி. பதவிக்கு வந்தார். அந்த ஆண்டு அவர் ராஜ்யசபா மூலம் முதல் முறையாக எம்.பி. ஆனார். நீண்ட காலம் ராஜ்யசபா எம்.பியாகவே இருந்து வந்த பிரணாப் முதல் முறையாக 2004ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2009ம் ஆண்டு மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1978ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். பின்னர் 1987 முதல் 89 வரை கட்சியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்தார்.
கட்சியின் பல்வேறு முக்கிய முடிவுகளில் பிரணாப் முகர்ஜியின் பங்கும் முக்கியமானது. குறிப்பாக சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸில் பிரணாப் முகர்ஜி முக்கியத் தலைவராக திகழ்ந்து வந்தார். கட்சிக்குள் ஏற்படும் பிரச்சினைகள், கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்படும் பிரச்சினைகள், ஆட்சி சந்தித்த சவால்கள் என பலவற்றுக்கும் பிரணாபின் உதவியையே சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் நாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சர் பொறுப்பை 2 முறை வகித்துள்ளார் பிரணாப் முகர்ஜி. முதலில் இந்திரா காந்தி அமைச்சரவையில், 1982 முதல் 84 வரை அவர் நிதியமைச்சராக இருந்தார். அதன் பின்னர் பல வருட இடைவெளிக்குப் பின்னர் 2009ம் ஆண்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவியேற்றார் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளைப் போலவே பொருளாதாரப் பிரச்சினைகளையும் போதும் போதும் என்கிற அளவுக்கு பிரணாப் முகர்ஜி தனது பதவிக்காலத்தின்போது சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியாவிடை கொடுக்கிறது காங்கிரஸ்
கடந்த 40 வருடங்களாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்புற பணியாற்றி, ஆட்சிக்கும், கட்சிக்கும் பெரும் தூணாக இருந்து வந்தவரான பிரணாப் முகர்ஜிக்கு இன்று காங்கிரஸ் காரியக் கமிட்டி சிறப்பு பிரியாவிடை கொடுக்கிறது. இதற்காக காரியக் கமிட்டி இன்று கூடுகிறது.
நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் பிரணாப் முகர்ஜி, அடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கிய தனது புதிய பயணத்தைத் தொடங்குகிறார்.












Click it and Unblock the Notifications