ஜனாதிபதி தேர்தலில் சங்மா தான் வெற்றி பெறுவார்: சாமி ஆரூடம்
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் 19ம் தேதி நடக்கிறது. இதில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பி.ஏ. சங்மாவும் போட்டியிடுகிறார்கள். இதில் தற்போதைய நிலவரப்படி பிரணாப் முகர்ஜிக்கு தான் அதிக ஆதரவு உள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மா தான் வெற்றி பெறுவார் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ரகசியமாக வாக்களிக்க நம் அரசியல் அமைப்பு அனுமதித்துள்ளது. அவர்கள் தங்கள் மனசாட்சிபடி வாக்களித்தால் சங்மா வெற்றி பெறுவார் என்றார்.
சங்மா 10 கோடி பழங்குடியின மக்களின் பிரதிநிதி என்று அவர் மேலும் தெரிவித்தார். பாஜக, அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தற்போது சங்மாவை ஆதரிக்கின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஆதரவு தெரிவித்த திரிணாமூல் காங்கிரஸ் தன்னுடைய தற்போதைய நிலை பற்றி எதுவும் தெரிவிக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.