சிறப்பு முகாம்களில் உயிருக்கு போராடும் இலங்கை தமிழர்களை விடுவிக்க வைகோ கோரிக்கை!
சென்னை: செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் உண்ணாவிரதம் இருந்து உயிருக்கு போராடி வரும் இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கை தீவில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய கொடிய அடக்குமுறையால் தமிழ் இனப் படுகொலையால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி, தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களில் பலரை பொய் வழக்குகள் போட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் மீதான வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தாலும், பிணையில் விடுவித்தாலும் மீண்டும் கைது செய்து செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்துத் துன்புறுத்தும் கொடுமை, கடந்த ஆட்சியில் நடைபெற்றது. அது இப்போதும் தொடர்கிறது.
அவர்களில் சிலர் தாய் தந்தை உறவினரை தமிழகத்திலேயே பிரிந்து சிறப்பு முகாமில் வேதனையில் வாடுகின்றனர். எனவே அவர்கள் தங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவித்து, திறந்தவெளி முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு தொடர்ந்து அறவழியில் போராடி வருகின்றனர்.
கடந்த 16ம் தேதி முதல் 10 நாட்களாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 11 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்து போராடி வருகின்றனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட செந்தூரன், பராபரன், செல்வராஜ், நர்மதன், சதீஷ்குமார், சேகர், செல்வா, ஜெகதாபன் ஆகிய 8 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனவே தமிழக அரசு செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டு கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications