அண்ணா மேம்பால விபத்தில் காயமடைந்த முதியவர் உயிர் ஊசல்- டிரைவரின் இரு கால்களும் முறிந்து போயின!
சென்னை அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தில் இன்று 17 எம் என்ற நகரப் பேருந்து தடுப்புச் சுவரைத் தாண்டி வந்து சாலையில் விழுந்தது. இதில் 38 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 28 பேரின் அதிகளவில் காயத்தைச் சந்தித்திருந்ததால் அவர்களை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றினர். 7 பேர் தொடர்ந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதியவர் உயிர் ஊசல்
இந்த விபத்தில் 62 வயதான முருகபூபதி என்ற முதியவர் படுகாயமடைந்துள்ளார். அவரது நிலைமை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரைவரின் இரு கால்களும் முறிந்து விட்டன
இந்த பஸ்ஸை பிரசாத் என்பவர்தான் ஓட்டி வந்தார். விபத்தில் அவரும் பெரும் காயத்தைச் சந்தித்துள்ளார். அவருக்கு இருகால்களும் முறிந்து போய் விட்டன. அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆறுதல் கூறினார்
விபத்து நடந்த செய்தி அறிந்ததும் அமைச்சர் பா.வளர்மதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அதேபோல மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரடியாக மீட்புப் பணிகளை முடுக்கி விட்டார்.