இடிந்தகரையில் ஜூலை 1ல் அணு உலைகளுக்கு எதிரான எழுச்சி மாநாடு
கூடங்குளம்: அணு உலைகளை முற்றிலும் கைவிட வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் பங்கேற்கும் மாபெரும் எழுச்சி மாநாடு இடிந்தகரையில் ஜூலை 1ம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் காலை 9 மணிக்கு தொடங்கும் மாநாட்டிற்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்குகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு முன்னிலை வகிக்கிறார். அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயக்குமார் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
மாநாட்டில், இந்திய பொதுவுடமைக் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் மகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, பெரியார் திராவிடர் கழகத்தின் கொளத்தூர் மணி, நாம் தமிழர் தலைவர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,பாமகவின் வடிவேல் ராவணன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், தமிழர் களத் தலைவர் அரிமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டின் நிறைவில் அணு சக்திக்கு எதிரான இயக்கத்தின் புஷ்பராயன் நன்றியுரை நவில்வார்.