விரைவில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தல்: அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தல் விரைவில் நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
1995ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் பிரிவு 14ன் கீழ் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்களிலிருந்து தனித்தனியாக உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் 26.6.12 அன்று தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வக்ஃப் வாரியம், மண்டல கண்காணிப்பாளர்கள் (வக்ஃப்) அலுவலகங்கள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் வெளியிடப்படும்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறித்தோ அல்லது சேர்க்கப்படாதது குறித்தோ யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் அவர்கள் அது குறித்த கருத்துகள் மற்றும் மனுக்களை ஒரு வார காலத்திற்குள் (3.7.2012 மாலை 5.30 மணிக்குள்) தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவே இறுதியானதாகும்.
தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் அதிகாரி, தேர்தல் அறிவிப்பு, கால அட்டவணை போன்றவை விரைவில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் முத்தவல்லிகள் தபால் மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும்.
அதற்கான வாக்குச் சீட்டு கோரி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அதற்கான படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் அதில் தங்கள் அடையாளத்தை உறுதி செய்ய தங்களின் கையொப்பங்கள், சம்மந்தப்பட்ட வக்ஃப் கண்காணிப்பாளர்களால் மேலொப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு 02.08.2012க்கு முன்பு வந்து சேர வேண்டும். தேர்தல் விதிகள் ஒவ்வொரு மண்டல கண்காணிப்பாளர்கள் அலுவலகத்திலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.