கொதிக்கும் சாம்பார் சட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உடல் வெந்து பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொதிக்கும் சாம்பார் சட்டிக்குள் விழுந்த 4 வயது சிறுமி உடல் வெந்து பரிதாபமாக பலியானாள்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தை அடுத்த களியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். அவரது 4 வயது மகள் பத்மா. கடந்த 28ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பத்மா வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது தான் சமையல் முடித்து கொதிக்கும் சாம்பார் சட்டியை கீழே இறக்கி வைத்திருந்தனர்.
ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த பத்மா சாம்பார் சட்டிக்கு அருகிலும் சென்றாள். அப்போது எதிர்பாராவிதமாக சாம்பார் சட்டிக்குள் சிறுமி விழுந்தாள். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பதறிய பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் பத்மா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தாள்.












Click it and Unblock the Notifications