வேல்முருகன் கார் மீது பாமகவினர் தாக்குதல்?-தாக்கியவர்களை கைது செய்ய கோரி மறியல்
அரியலூர்: அரியலூரில் திருமண விழாவிற்கு சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். பாமகாவினர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி, வேல்முருகன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி முன்னாள் பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி தலைவராக இருந்து வருகிறார். வேல்முருகன் புதிய கட்சி தொடங்கிய பிறகு அவரது ஆதரவாளர்களுக்கும், பாமகவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டம், பாப்பாக்குடி கிராமத்தில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவிற்கு, வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் இன்று குவாலிஸ் காரில் சென்றார்.
திருமண விழா முடிந்து காலை 11.30 மணி அளவில் காரில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது காடுவெட்டி 4 ரோட்டில் அருகே மறைந்து இருந்த மர்மநபர்கள் சிலர், வேல்முருகனின் கார் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் காரில் இருந்த முன்பக்க, பின்பக்க மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
கார் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக அறந்தாங்கி சாலையில் சென்றார். பின்னர் வேல்முருகன் சேத்தியாத்தோப்புக்கு வந்து சேர்ந்தார். தாக்குதல் சம்பவத்தில் வேல்முருகன் காயமின்றி தப்பினார். இது குறித்து மீன்சுருட்டி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேல்முருகனின் கார்களின் மீது பாமகவினர் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, வேல்முருகனின் ஆதரவாளர்கள் பாப்பாக்குடி தனலெட்சுமி திருமண மண்டபம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதல் மற்றும் சாலை மறியல் சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications